மதுரை: மதுரையில் இன்று பாகுபலி திரையிடப்பட்டுள்ள சினிமா தியேட்டரில்
இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக புரட்சிப்புலிகள் அமைப்பை
சேர்ந்த 6 பேர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
மதுரையில் நத்தம் சாலையில் உள்ள தமிழ், ஜெயா என்ற இரண்டு திரையரங்குகளில்
பாகுபலி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணி
அளவில் மர்ம நபர்கள் சிலர் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
இதில் திரையரங்கில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
பாகுபலி படத்தில் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம்பெற்று
உள்ளதாகவும் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் புகார் கூறி, மதுரையில்
புரட்சிப்புலிகள் அமைப்பு மற்றும் ஆதித் தமிழர் கட்சியினர் சில
தினங்களுக்கு முன்பு, படம் வெளியான தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், நத்தம் ரோட்டில் உள்ள பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ள
தியேட்டரில் இன்று காலை, 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது.
இதில் தியேட்டரின் காம்பவுண்டு சுவர் சிறிய அளவில் சேதம் அடைந்தது.
நல்லவேளையாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து
வந்து விசாரணை நடத்தினார்கள். பாகுபலி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
புரட்சிப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது
தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல்குண்டு வீசிவிட்டு
தப்பி ஓடிய 6 கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் தல்லாகுளம்
காவல்நிலையத்தில் புரட்சிப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 6 பேர்
சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.